Sunday, December 26, 2010

எவ்ரிடே இஸ் சண்டே - 2



குறைகள், கவலைகள், பிரச்சினைகள் வாழ்க்கையில் இருந்தாலும், ரசனை ரசிப்புக்கள் என்கிற உணர்வுகள் அவைகளை எளிதாக கடந்து செல்ல உதவும் வரங்கள். போனா போகுதுன்னு நம்ம பிளாக்கை படிக்க வருபவர்களை பெர்சனல் விஷயங்களை சொல்லி இம்சிக்க கூடாது என நீண்ட நாட்களாய் ஒரு கொள்கை வைத்திருந்தேன்.  ஆனால் ஞாயிறுகளில் அதிகம் பேர் படிக்கமாட்டாங்களாமே.. அதனால அதிக சேதாராம் இருக்காது என்கிற நம்பிக்கையோடு.... வாழ்வை ரசிப்பதை தொடர்கிறேன்.


சினிமா




■   இணையம் தந்த அருட்பெரும் கொடைகளில் ஒன்று, பிற மொழியில் வெளிவந்துள்ள நல்ல திரைப்படங்கள் பற்றி தெரிந்து கொள்ள வழிசெய்வது. தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் திரைப்படத்தை இந்த விமர்சனம் படித்து ஒரு சனிக்கிழமை இரவு விடிய விடிய இரண்டு முறை பார்த்தேன். மனதை கனமாகவும் லேசாகவும் ஆக்கக்கூடிய திரைப்படம். உணர்வுபூர்வமாக செல்லும் கதை நிறையவே என்னை பாதித்தது. பாதித்தது என்பதை விட முடிவில் இனம்புரியாத உற்காகம் கொடுத்தது என்று கூட சொல்லலாம். வசனங்களும் முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பும் வெகு அருமையாக இருக்கும். ரசித்து ரசித்து நான் சமீபத்தில் பார்த்த ஆங்கிலப் படம் இதுதான். ஆண்டி டூப்ரென்ஸ் என்கிற கதாநாயகன் சிறையிலிருந்து தப்பிக்கும் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும் தருணம். வாழ்க்கையின் பெரும் வரம் சுதந்திரம் என்பதையும் அந்த சுதந்திரம் தரும் ஆனந்தத்தையும் அந்த காட்சியில் நாம் உணர முடியும். மிஸ் பண்ணக்கூடாத படம்!


 பயணம்








■    பொறுமையாய் வயல் வெளிகள் சூழ்ந்த நெடுஞ்சாலையில் பச்சை வாசனை காற்றை சுவாசித்தபடி பைக்கில் நெடுந்தூரம் செல்வது வெகு ரசனையான பயண அனுபவம். உயிர் நண்பன் கிருஷ்ணாவின் திருமணத்திற்காக கடைசி நிமிடம் வரை பேனர் டிசைன், வாழ்த்து அட்டை தயாரிப்பு என நேரம் சென்றுவிட்டதால் வேறு வழியின்றி கடைசி நிமிடத்தில் நான்கு நண்பர்கள், இரண்டு பைக்குகளில் கிளம்பினோம். சென்னையிலிருந்து ஆரணி. நான்கு மணி நேர பயணம். வேகம் காட்டாமல் ஆட்டம் போடாமல் நிதானமாய் சாலைகளை ரசித்துக்கொண்டே சென்றோம். ஆங்காங்கே நிறுத்தி புகைப்படங்கள் எடுத்தும் வழியில் கிடைத்தவற்றை சுவைத்தும் என நினைவில் நிற்கும் பயணம். 


வரைகலை





■    மற்ற மாதங்களில் எப்படி சோர்வுற்று இருந்தாலும் மார்கழியில் அம்மாவிற்கு இருபது வயது குறைந்துவிடுவது சிறுவயது முதலே எனக்கு ஆச்சரியமான விஷயம். கலர் பொடிகள் வாங்கி வைத்து கலக்கி, பேப்பரில் அன்றைய கோலத்தை வரைந்து பார்த்து, தெருவில் வண்ணச் சேர்க்கையுடன் அவர் இறங்கி கோலமிடும் போது, வேறு எதைப்பற்றியும் சிந்திக்க மாட்டார். அவ்வப்போது பல கோணங்களில் மாறி மாறி நின்று பார்த்து கோலம் சரியாக வருகிறதா என செக் செய்து கொள்வார். சிறு வயதில் ஆர்வத்தில் கெஞ்சி கெஞ்சி கேட்டு கோலப்பொடி வாங்கி வண்ணம் சேர்க்க தெரியாமல் கடும் திட்டு வாங்கிய அனுபவங்கள் ஏராளமாய் உண்டு. 

அம்மா தரையில் கோலம் போடுவதும் இன்று கணிணியில் நான் தொழில் நிமித்தமாய் டிசைனிங் செய்வதும் என இரண்டுமே ஒன்று என்றாலும் ரசனையான ஈடுபாடு என வரும்போது இன்னும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமாய் இருப்பதாகவே நினைக்கிறேன்.




"என்னடா ஏதோ கிராபிக் டிசைனர்னு சொல்லிக்கிற ஒரு மாடு வரைய தெரியாதா?" என அம்மா உசுப்பேத்தி விட, நான்கு வருடங்களுக்கு முன்னிருந்து ரொம்பவும் பிராக்டிஸ் செய்து பேப்பரில் வரைந்து வரைந்து பார்த்து மாட்டு பொங்கலுக்கு கிட்டத்தட்ட மாடு மாதிரி ஒன்றை கோலமிட்டு வருகிறேன்.  சில சமயம் கழுதை, குதிரைகள் என நமக்குள் இருக்கும் எதிர்பாராத திறமைகள் வெளிப்படும். அதையெல்லாம் பார்த்து பெருமைப்பட்டு ஃபீல் பண்ணாமல் அம்மா அதை அப்படியே தண்ணீர் விட்டு அழித்து என்னிடம் இருந்து 'கிட்டத்தட்ட மாடு மாதிரி' ஒன்று வரும் வரை விட மாட்டார்.

அப்படி கடந்த மாட்டு பொங்கலுக்கு நான் வரைந்த மாடு மாதிரி ஒன்றினை ஒரு நாய் அருகே அமர்ந்து நெடு நேரம் பார்த்துக்கொண்டே இருந்தது. அது கடுப்போடு வெறிக்கிறதா, இல்லை ரசிக்கிறதா என கடைசி வரை கண்டுபிடிக்க முடியாமல் போனதுதான் காலத்தின் கோலம்!



Saturday, December 18, 2010

ஓரே ஒரு சீனை வெட்டு - ஈசன் சூப்பர் ஹிட்டு




சில வருடங்களுக்கு முன் இரவு பப்பில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஸ்டெஃபனி என்கிற ஆங்கிலோ இந்திய பெண்ணை காரில் இரண்டு இளைஞர்கள் துரத்தி கலாட்டா செய்யப்போக அவர் விபத்தில் பலியானார்.  இதேபோன்று வடிவமைக்கப்பட்ட காட்சியுடன் ஈசன் படம் ஆரம்பிக்கிறது.

அமைச்சருக்கு நிலம் தர மறுத்த ஒரு விதவை பெண் பட்டப்பகலில் என்சைக்ளோபீடியா விற்பது போல வருபவனால் வீட்டிலேயே வைத்து குழந்தையுடன் கொள்ளப்படுகிறாள். அதை கள்ளக்காதல் கொலையாக ஜோடித்து தன் ஆள் ஒருவனை கைதாக வைக்கிறார் அமைச்சர்.

இதே போன்ற இன்றைய செய்தித்தாள்களில் காணப்படும் பல செய்திகளையும் அவற்றின் பின்னால் திரைமறைவில் நடப்பவைகளையும் சேர்த்து நெய்யப்பட்டிருக்கும் படம் ஈசன்.

ஒரு அமைச்சர், அவரது செல்ல மகன், பப், குடி, பெண்கள் என சந்தோஷமாய் வாலிப வயதை கழிக்கும் அவனது நண்பர்கள் பட்டாளம். ஏதாவது பிரச்சினையில் நண்பர்கள் மாட்டிக்கொண்டால் அவர்களை தனது தந்தையின் பலத்தை கொண்டு காப்பாற்றுகிறார் செல்ல மகனான வைபவ். இதனால் எப்பொழுதும் அமைச்சருடன் உரசலில் இருக்கிறார் நேர்மையான அசிஸ்டென்ட் கமிஷனர் சமுத்திரக்கனி. ஒரு நல்ல சுப இரவில் ஒரு பப்பில் ஒரு தொழிலதிபரின் மகள் மேல் காதல் கொள்கிறார் வைபவ். இதனால் ஆத்திரமடையும் தொழிலதிபர் தன் மகளை மறந்துவிட சொல்லுமாறு அமைச்சரை மிரட்டுகிறார். இதனால் கோபமுறும் அமைச்சர் அவரது பெண் தற்கொலை செய்துக்கொள்ளக்கூடும் என்கிற வகையில் இமொஷனல் பிளாக்மெயிலால் அவரையே மிரட்டுகிறார். இதனால் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார் தொழிலதிபர்.

இந்நிலையில் திடீரென ஒரு மர்ம நபரால் தலையில் பலமான இரும்பால் தாக்கப்பட்டு வைபவ் சரிந்து விழுகிறார். தாக்கியவரின் நிழல் மட்டும் தெரிய அப்பொழுது ஈசன் என்கிற டைட்டிலுடன் இடைவேளை விடப்படுகிறது.

இடைவேளையில் ஏ.ஜி.எஸ் சினிமாவில் 30 ரூபாய்க்கு கிடைக்கும் 5 குட்டி சமோசாக்களை வாங்கி வந்து கொறித்துக்கொண்டே பார்த்தால் காணாமல் போன வைபவ்வை கண்டுபிடிக்க சமுத்திரக்கனி தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்.  வைபவ்வின் நண்பன் வினோத் மருத்துவமனையில் ஏனென்று சொல்லப்படாமல் உயிரிழக்கிறார். சமுத்திரக்கனியின் படிப்படியான விசாரணையில் முடிச்சுக்கள் அவிழ்கிறது. வைபவ் மற்றும் அவரது நண்பர் ஊரிலிருந்து மேற்படிப்புக்காக குடும்பத்துடன் சென்னையில் வந்து செட்டிலாகிவிடும் அபிநயாவை பலாத்காரம் செய்துவிட அவர்கள் இருவரையும் அபியின் தம்பி பழிவாங்குகிறான் என்பதை கண்டுபிடிக்கிறார் சமுத்திரக்கனி. பின்னர் கொஞ்சம் ஓவர் டோஸான கிளைமேக்சுடன் படம் முடிகிறது.

படத்தின் பிளஸ் என்று பார்த்தால் ஒளிப்பதிவு, சமுத்திரக்கனி, நாடோடிகள் படத்தில் அந்த பந்தா பார்ட்டியாக வலம் வந்தவர், அபிநயா என்ற சொற்பமானோர். சமூக அக்கறையுடன் பல விஷயங்களை படம் நெடுகிலும் தெளித்திருப்பதையும் பாராட்டலாம். முதல் பாதியில் காவல் அதிகாரி <-> அரசியல்வாதி <-> தொழிலதிபர் ஆகியோருக்கிடையேயான கிளாஷ் நன்றாக இருக்கிறது.

வீடுகள், உடை, வாழ்க்கை முறை, சுற்றுப்புரம், பேருந்து, சுவரில் இருக்கும் ஐடெக்ஸ் கண் மை விளம்பரம் உட்பட சுப்ரமணியபுரத்தில் 1980 களை மெனக்கெட்டு பிரதிபலித்து நம் மனதில் நீங்கா இடம் பிடித்து வெற்றி பெற்றிருந்தார் சசிகுமார். அதே போல ஈசனில் 2010-இனை பிரதிபலிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். இரவு நேர பப் கலாச்சாரம், பார்ட்டி நடத்தி போலிஸ் கைது, அரசியல்வாதிகள் சொத்துக்களை வளைத்தல், நிறுவனங்களை மிரட்டி கமிஷன் அடிப்பது, இண்டெர்நெட்டில் ஹாக்கிங் செய்து இ-மெயில் தகவலை மாற்றுவது, தொழிலதிபர்கள் - அரசியல்வாதிகள் மோதல், சிக்சர், ஃபோர் அடித்தால் பக்கத்தில் இருக்கும் நடிகையை கட்டிப்பிடிக்கும் கிரிக்கெட் அணி வைத்திருக்கும் தொழிலதிபர் என இன்றைய காலகட்டம் பிரதிபலிக்க வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுப்ரமணியபுரத்தில் மெனக்கெட்டிருந்த அளவிற்கு இதில் உழைக்கவில்லையோ என தோன்றுகிறது. இவை யாவும் கோர்வையாக சொல்லப்படாததாலும் மனதில் ஒட்ட மறுக்கிறது. சுப்ரமணியபுரத்தில் இருந்த அந்த மேக்கிங் ஸ்டைல், அந்த ஃபீல், அந்த மிரட்டிய திரைக்கதை இவை யாவும் இந்த படத்தில் இல்லாதது சசிகுமாரை எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே.

இந்த இரவுதான் போகுதே, சுகவாசி பாடல்கள் இரண்டும் ஓ.கே.! வந்தனம் பாடல் நல்ல முயற்சி. அந்த கெட் ரெடி பேஷன் பாட்டு மொக்கை. பின்னணி இசையில் கொஞ்சம் தேர்ச்சி பெற வேண்டும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள். இதற்காக அவரை ஆர்மோனியப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஊருக்கே போயிடுங்க என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு எனக்கு இசை தெரியாது என்பதை இங்கே சொல்ல விரும்புகிறேன். (ஜெயா டி.வி.யில் ஹரியுடன் நான் நிகழ்சியில் நடுவராக கலந்து கொண்ட ஜேம்ஸ் வசந்தன், சரியாக பாடாத சிறுவர்களை "நீ எல்லாம் ஏன் பாட வர்ற.. வேற வேலையை பார்க்க போ" என்கிற ரீதியில் அவமானப்படுத்தியதை நான் இங்கே நினைவு கூற விரும்பவில்லை...)

முதல் பகுதியில் அமைச்சர் அழகப்பன் -  அதிகாரி சமுத்திரக்கனி - தொழிலதிபர் என பரபரப்பாக செல்லும் கதை சட்டென இரண்டாம் பாதியில் வேறு டிராக்கில் பயணிப்பதால் கதையோடு ஒன்ற முடியவில்லை. என்ன சொல்ல வருகிறார்கள், ஏன் அந்த முதல் பாதி என இரண்டாம் பாதியில் குழப்பத்துடனேயே படம் பார்க்க வேண்டியதாகி விடுகிறது. கருப்பு சாமியாக ஆடு ரத்தம் குடிக்கும் அபியின் அப்பா, தன் மகளுக்கு அப்படி ஒரு கொடுமை நேர்ந்த உடன் வெறும் வியர்வையுடனே அடங்கிப் போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  டியூட், டியூட் என வாலிப நண்பர்கள் உச்சரித்துக்கொள்வதிலேயே அழுத்தம் இல்லை. நண்பர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் மொக்கையாகவே இருக்கிறது. நெகட்டிவ் என்றால் சொல்லிக்கொண்டே போக வேண்டி இருப்பதால், சுப்ரமணியபுரத்தை தந்த சசி என்பதால் இம்முறை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்.

இந்த படத்தை யார் வேண்டுமாயின் எடுத்து விட முடியும். சசிகுமாரிடம் இருந்து இன்னும் உயர்தரமான படங்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் எழுத்து, தயாரிப்பு, இயக்கம் - சசிகுமார் என அவர் பெயர் வரும் அந்த ஒரே ஒரு சீனை மட்டும் தவிர்த்துப்பார்த்தால் ஈசனை ஹிட் வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

Wednesday, December 8, 2010

அழகிய சிருஷ்டி நந்தலாலா ஆர்யாவின் திருஷ்டி சிக்குபுக்கு





சரியாக நந்தலாலா வெளியாகி ஒரு வாரம் கழித்து கடந்த வெள்ளிக்கிழமை பத்மம் திரையரங்கில் பார்த்தேன். பதிவுலகில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றதாலும், பல பதிவர்கள் படத்தை பார்க்க பரிந்துரை செய்ததாலும் படம் பார்க்கும் ஆவல் விடாமல் துரத்திக்கொண்டே இருந்தது.  ஆனால் திரையரங்கினுள் நுழைந்த உடன் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சரியாக ஏழெட்டு பேர்தான் இருந்தார்கள். படம் ஆரம்பிக்கும்போது எண்ணிக்கை இருபதை தாண்டவில்லை.

 தாயை தேடி பயணிக்கும் இரு குழந்தைகளின் கதை. இது போன்ற டெம்ப்ளேட்களை டி.வி.டி போட்டு சனிக்கிழமை இரவுகளில் சப் டைட்டிலுடன் வேற்று மொழியில் பார்த்தே பழகிவிட்டதால் திரையரங்கில் நமது மொழியில் பார்க்கும் அனுபவம் ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே என மிரட்டிய இயக்குனர் மிஷ்கின் முற்றிலும் வேறு பரிமாணத்தில் பயணித்து முக்கிய கதாபாத்திரத்தையும் சுமந்து, நந்தலாலவிலும் மிரட்டியிருக்கிறார். பாராட்டுக்கள்.

படத்தில் முதலில் என்னை ஈர்த்தது டைட்டில்தான். ஓடிக்கொண்டிருக்கும் நீரில் அந்த அசையும் நீர் செடிகள்.. வாவ்...படத்தின் டோன் இற்கேற்ப மனதை தயார் செய்யும் விதத்தில் அந்த டைட்டில், சிறிய தியானம் செய்வதை போன்ற மன அமைதியை தருகிறது. ஹேட்ஸ் ஆஃப்.

இளையராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலம்தான் என்றாலும்,  பல விமர்சனங்களை படித்து அதிகமாக நான் எதிர்பார்த்து சென்றபடியால் எனக்கு இது கம்மியாகவே பட்டது. பொம்முக்குட்டி அம்மாவுக்கு பிண்ணனி இசையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது கம்மிதான்.

இது போன்ற புதிய முயற்சிகள் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவை. படத்தில் வெகு சில இடங்களில் இடர்கிறது. அந்த சைக்கிள் பெண் அடிபட்டு கிடக்க, மிஷ்கின் காயத்தை பார்க்க முயல்கையில் எந்த பெண்ணும் அவ்வாறு கூச்சலிடாமல் உட்கார்ந்தே இருக்க மாட்டாள். இதுபோன்ற சில சில விஷயங்கள் இடரினாலும் அவற்றை சொல்லி கும்மியடிக்க இந்த படத்தை பொறுத்த வரையில் எனக்கு மனசு வரவில்லை. அதற்காகவே தான் பல படங்களை வெளியிடுகிறார்களே.. வாங்க அதில் ஒன்றினை பார்ப்போம்.





அதே பத்மம் திரையரங்கம், மறுநாள் சனிக்கிழமை நண்பன் டிக்கெட் எடுத்துவிட்டபடியால் சிக்கு புக்கு செல்ல வேண்டியதாகி விட்டது. நேற்று பார்ததிருந்த அதே பயண கதை பாணியில் பார்ப்பவர்களை எவ்வளவு வெறுப்பேற்றலாம் என யோசித்து செதுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்.

தமிழ் சினிமாவின் லூசு கதாநாயகிகள் கலாச்சாரப்படி ஷ்ரேயா. சத்தியமா சொல்றேன். ஷ்ரேயாவை இதுக்கு மேல யாரும் மொக்கையா காண்பிக்க முடியாது. இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் ஷ்ரேயா வந்ததைதான் இத்தனை நாள் மொக்கையாக நினைத்திருந்தேன். ஆனால் இதில் அவர் தனது பழைய சாதனையை அவரே முறியடிக்கிறார்.  லண்டனில் வாழும், படித்த அழகான பெண் கேரக்டர், அதுக்குன்னு ஒரு மரியாதை இல்லையா பாஸ்... இவ்வளவு லூஸாவா இருப்பாங்க.

கையில் காசு இருக்கிறது. டிரையினில் இருந்து இறக்கி விட்டால் நாம என்ன செய்வோம். அதே ஸ்டேஷனில் இறங்கி வெயிட் பண்ணி அடுத்த டிரையினில் போவோம் இல்லையா.. இங்கே அப்படியில்லை. காடு, மலை, கடல் தாண்டி பயணித்து மீண்டும் வேறு ஏதோ ஸ்டேஷனில் ஏறுகிறார்கள்.. முடியல.. பயண கதை எடுக்கனும்னு ஆசை படுறது தப்பில்லை. அதுக்காக இப்படியா..

கதையில் சடாரென ஃபிளாஷ் பேக் துவங்கும்போது ஏதோ புதிதாய் செய்யப்போகிறார்கள் என நிமிர்ந்து உட்கார்கிறோம். ஆனால் நன்றாக போகும் பிளாஷ் பேக்கில் அந்த அம்மையப்பன் கேரக்டர், ஒடி வர மறுத்த ஹீரோயின் திடீரென ஹீரேவை தொடர்பு கொள்வது என அதையும் சொதப்புகிறார்கள்.

அந்த இன்னொரு கதாநாயகி ப்ரீத்திக்கா அழகாக இருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் பிராகாசிக்கும் வாய்ப்பு இருக்கிறது. 

படத்தின் ஒரே ஆறுதல் சந்தானம்தான். மனிதர் வரும்போதே விசில் பறக்கிறது. சந்தானம் வரும் காட்சிகள் நல்ல கல கல.

படத்தில் நான் ரொம்ப சிரித்தது, கடைசியில் அந்த அம்மையப்பன் கேரக்டரை அப்பா வேஷத்தில் காண்பித்ததைத்தான்.. பேன்சி டிரஸ் காம்பெட்டிஷனில் வேஷ்டி சட்டை கட்டிய சிறுபிள்ளை போல இருந்தார். 

'அங்கதான் சார் டிவிஸ்டு வைக்கிறோம்' என கிளைமேக்ஸில் ஒரு டிவிஸ்ட்டு... ஸ்ஸ்ஸ்ப்பா இதுக்கும் மேல சொன்னா சரிப்பட்டு வராது... 

Thursday, November 25, 2010

மந்திர புன்னகை - முக்கால்வாசி கிணறு












ண்மையிலேயே வித்தியாசமாக சொல்லப்பட்டுள்ள இன்டிரஸ்டிங் சப்ஜெக்ட். கதிர் என்னும் ஆர்க்கிடெக்ட். சிறுவயதில் தன் தாயின் தவறால் டில்யூஷனில் வாழ்பவர். நேரடியாகவும், தடாலடியாகவும் ஒளிவு மறைவின்றி வாழும் இவர் மேல் காதல் கொள்கிறார் கதாநாயகி. இவரது டில்யூசனால் இவர்களது காதலில் பிரச்சினை ஏற்பட, பின்னர் அந்த காதலே அவரது குறையை போக்க எப்படி உதவுகிறது என்பதுதான் கதை. படத்தில் பிளாஷ்பேக், டிவிஸ்ட்டுகள் இருப்பதால் இதற்கு மேல் கதையை சொன்னால் படம் பார்க்கும்பொழுது சஸ்பென்ஸ் இருக்காது. 


முக்கால்வாசிக்கும் மேலான நேரம் படம் செல்லும் வேகமே தெரியவில்லை. கதிராக வரும் கதாநாயகனின் கேரக்டரைசேஷனை படிப்படியாக வலுப்படுத்தியும், காட்சிகளுக்கு தம்பி ராமையா, சந்தானத்தின் ரகளைகளால் உரமிட்டும், பார்லர்களில் பல நூறு மணி நேரங்கள் ப்ளீச் செய்யப்பட்ட பளிச் முகத்துடனான மீனாட்சியை காண்பர்கள் மனதுக்கு இதமாக உலவ விட்டும் முதல் பாதி பரபரவென பறக்கிறது. இரண்டாம் பாதியில் கதிரின் தடாலடியான மன நிலைக்கான காரணங்களை சொல்லி சில டிவிஸ்ட்களை தரும் வேளையில் கதை 'அட' போட வைக்கிறது.  அடுத்தடுத்து நாயகனை விடாத நாயகி, பணிந்து கொடுக்காத நாயகன் கடைசியில் வேறு வழியில்லாமல் சுபமான கிளைமேக்ஸ் என முடிவில் மட்டும் கொஞ்சம் சமரசம் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.


    ஷட்டர் ஐலண்ட், தி சிக்ஸ்த் சென்ஸ் படங்களில் வருவது போன்ற சஸ்பென்ஸ் உத்தி ஒன்றினை இயக்குனர் இப்படத்தில் கையாண்டுள்ளார். இரண்டாம் பாதியில் அதைப்பற்றி அறிகையில் முதல் பாதியில் சம்மந்தப்பட்ட காட்சி அமைப்புகளை யோசித்து ரசித்தேன். உதாரணத்திற்கு முதல் பாதியில் இரவு உறங்கும் முன் அப்பாவிடம் பணம் எடுத்துக்கொள் என வைத்துவிட்டு படுப்பதும்.. காலையில் கிளம்பி விடும் அப்பா அதை எடுத்துக்கொள்ளாமல் அப்படியே விட்டிருப்பதும்!  அதேபோல் பாட்டியிடம் கல்யாண செய்தி சொல்லும்பொழுது அப்பா அங்கே இல்லாமல் திண்ணையில் தனியாய் இருப்பது என குறிப்பிட்ட காட்சிகைளை கவனமாக செய்திருக்கிறார்கள். 




     தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் கதாநாயகன், காதலில் நம்பிக்கை இல்லாதவன்.. அவனுக்கே ஒரு பெண் மீது காதல் வருகிறதெனில் அந்த பெண் பாத்திர தேர்வு எவ்வளவு முக்கியமானது? மீனாட்சி தன் முக்கியதுவத்தை உணர்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். படம் முழுவதும் பளிச்சென பிரஷ்ஷாக இருக்கிறார். இதனால் எனக்கு மீனாட்சியை பார்க்கும்பொழுது ஒரு ஃபீல் குட் உணர்வு எழும்புகிறது. அவரது கிளாமரை மட்டும் நம்பி இருக்காமல் திரையில் கணிசமான ஒதுக்கீடு அவரது நடிப்பிற்கும் வழங்கப்பட்டுள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால் பல இடங்களில் ஸ்லிப் ஆகும் லிப் சிங்கிங் வழக்கமான வடக்கத்திய கதாநாயகிகளை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. 


    படம் நெடுகிலும் ரசிக்க வைக்கும், ஷார்ப்பான வசனங்கள் கொட்டிக்கிடக்கின்றது.  பல ஊறிப்போன கான்செப்டுகளை போட்டு பட்டென உடைக்கும் பல வசனங்கள் சிரிப்பையும் வரவழைக்கிறது சில அதிர்ச்சியையும் வரவழைக்கிறது. பலமான சிரிப்பலைகளை வரவழைத்து படத்தின் பெரிய பலமாக இருப்பது சந்தானம்தான். டபுள் செஞ்சுரி அடிக்கும் வேளையில் சச்சினுக்கு வாய்ப்பு வழங்காமல் காஜ் ஆடிய தோனி போலல்லாமல் இயக்குனர் இவருக்கு அதிக வாய்ப்பு வழங்கியிருப்பது புத்திசாலித்தனம். அதிலும் சந்தானம் ஜோடி போட்டு காமெடியில் கலக்கியிருக்கிறார். மனைவிக்கு புடவை வாங்கி தருவது, ஊரிலிருந்து வரும் சொந்தங்கள் என கொஞ்சம் லென்த்தியான காமெடி போர்ஷன்கள் ஸ்டராங் சப்ஜெக்ட்டான படத்தை இலகுவாக மனதில் குடியமர்த்துகிறது. ஆனால் சந்தானத்தின் சில தேவையற்ற ஆபாச வசனங்களை மட்டும் தவிர்த்திருக்கலாம். 


    எதற்கும் அலட்டிக்கொள்ளாத ரோலில் அசால்ட்டாக நமது ஹாஸ்டல் ரூம் மேட் நண்பன் போலவே எளிமையாய் இருக்கிறார் கரு.பழனியப்பன். படம் நெடுகிலும் குடித்துக் கொண்டும், பிற ஹீரோக்கள் தயங்கக்கூடிய வசனங்களை சரளமாக பேசிக்கொண்டும் அசாதாரண ஹீரோ ரோலை சாதாரணமாக செய்து முடித்திருக்கிறார் இவர். அப்பா கேரக்டர்,  தம்பி ராமையா,  மகேஸ்வரி, பிளாஷ் பேக்கில் வரும் சேகர் கேரக்டர், அம்மா கேரக்டர், டீலா நோ டீலா ரிஷி  இவர்களது நடிப்பு நன்றாக இருக்கிறது. கதையின் முக்கியமான டாக்டர் கேரக்டர், கதாநாயகியின் அண்ணன் ஆகியோர் இன்னும் கொஞ்சம் நன்றாக பண்ணியிருக்கலாம். கண்டிப்பாய் டாக்டர் கேரக்டரை கொஞ்சம் ஹெல்த்தியாய் கம்பீரமாய் வடிவமைத்திருக்கலாம்.


    "அன்பில்லாம..." பாடல் வேகமான பீட்டுகளினாலும் படத்தின் கதைக்கருவுடன் சம்பந்தப்பட்ட தீம் பாடல் என்பதனாலும் படத்தில் தனித்து மனதில் நிற்கிறது.  "தட்ட தட தட" அழகான காதல் மெலோடி. பாடலின் பின்னணியில் ஏற்படும் ஸ்லோமோஷன் அதிர்வு ஒளிப்பதிவு நல்ல ஐடியா.  "தண்ணி போட வாப்பா..." பாடலும் நல்ல டியூன் ஆனாலும் அதில் இன்னும் கொஞ்சம் நடன அமைப்புகளை அமைத்திருந்தால் பாடல் அட்டகாசமான குத்து பாடலாய் இருந்திருக்கும். அப்புறம் மேகமோ என்னவோ ஒரு பாடல் வருகிறது. அது இழுக்கிறது.


    ரொம்பவும் திடமான கதாபாத்திரமாக ஹீரோவை காட்டிவிட்டு கிளைமேக்சில் நாலு லைன் கதாநாயகி பேசிவிடுவதால் திடீரென மாறிவிடுவது மட்டும் ரொம்பவும் இடிக்கிறது. என்னைப்போன்ற சாதாரண பெருவாரியான ரசிகர்களுக்கு இத்தகைய ஹேப்பி எண்டிங் இல்லாவிட்டால் நைட் சோறு எறங்காதுதான். ஆனால் ஆரம்பம் முதலே மிரட்டி வந்த இப்படத்தில் வேறு ஏதாவது மிரட்டலான கிளைமேக்ஸ் எதிர்பார்த்தேன். 


   முதல் பாதி அதிரடியாகவும், இரண்டாம் பாதியில் பாதி நேரம் நல்ல டிவிஸ்ட்களுடனும் என்று முக்கால்வாசி கிணறினை பிரமாதமாக தாண்டியிருக்கிறார்கள். ஆனால் கடைசியில் செய்து கொள்ளப்பட்டுள்ள கமர்ஷியல் காம்ப்ரமைஸ் மட்டும் படத்தின் தீம் உடன் ஒட்டவில்லை. எனினும் மொத்தத்தில் எடுத்துக்கொண்டுள்ள வித்தியாசமான களத்திற்காகவும்,  சுவாரஸ்யமாக கதை சொல்வதினாலும், கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம் மந்திர புன்னகை!


___________


பதிவர்களுக்கென ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்படுவது இதுவே முதல்முறை. படத்தின் களத்தைப்போலவே இத்தகைய புதுமையான யோசனையை நிகழ்த்தியிருக்கும் இயக்குனருக்கு எனது பாராட்டுகளும் நன்றியும்!! பதிவர்களை பதிவிலும் தொலைபேசியிலும் நிகழ்ச்சியில் ஒருங்கிணைத்த பதிவர் உண்மைத்தமிழன் அவருக்கு என் ஸ்பெஷல் நன்றி!!!



Friday, October 29, 2010

ஃபீலிங்ஸ் - 29 - 10 - 10








■  வலைச்சரத்தில் நான்


இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் எழுதுகிறேன். வாரம் ஒரு பதிவர் தங்களுக்கு தெரிந்த பல பதிவுகளை அறிமுகப்படுத்தும் சாராம்சத்தை கொண்டது இந்த தளம். பாருங்க... படியுங்க.. என்சாய் பண்ணுங்க...







■  கடுப்பேற்றிய புத்தகம்



 சமீபத்தில் ஆசையாய் ஒரு தமிழ் புத்தகம் வாங்கினேன். குறிப்பிட்ட தியானம் சம்பந்தப்பட்டது. முக்கால்வாசி புத்தகம் வரை மற்ற பாசிட்டிவ் புத்தகங்கள் போல மாவு அரைக்கப்பட்டிருக்கிறது. அதை அப்படியே வைத்துவிட்டேன். அந்த டாபிக் போட்டா அதை பத்தி சொல்லுங்கப்பா... அதை விட்டுட்டு.. எனக்கு வந்த கடுப்புக்கு.... இதே சினிமாவா இருந்தா கிழி கிழின்னு கிழிச்சு பதிவு போட்டிருப்பேன். புத்தகமா போயிடுச்சு... நெகடிவ்வா பதிவு போட மனசு வரமாட்டேங்குது.
கடைசியில இதுக்கு நாமளே இந்த டாபிக்ல எழுதிடாலாமேங்கிற அளவிற்கு தோன்ற வைச்சிடுச்சி அந்த புத்தகம்.. 


ஒருவேளை இதுதான் தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகம் அப்படிங்கிறதோ...?



 டிவிட்டர்


நானும் டிவிட்டர்ல இருக்கேன்னுதான் பேரு..  என்ன பண்றது ஏது பண்றதுன்னு ஒண்ணும் புரியலை... ஆனா பிளாக், பேஸ்புக் போல இதுவும் கொஞ்சம் தொப்பையை வளர்த்து விட போகுதுன்னு மட்டும் புரியுது. சமீபத்தில் நான் டிவிட்டிய சில உங்கள் பார்வைக்கு.



  வாரா வாரம் நடிகர்களுக்கு ஏதேதோ விருதுகள் வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இவங்க இம்சையெல்லாம் தாங்கும் ரசிகர்களுக்கு ஏதும் தரமாட்டாங்களாமா?

 மதராசப்பட்டிணம் படத்தை ஹிந்தியில் எடுத்தால் எப்படி இருக்குமென்றான் நண்பான். அடப்பாவி... அதை எடுத்ததே அங்கிருந்துதான்டா என்றேன்

✔ 2 நாட்களாய் ரஜினி, ஷங்கர் கொடுத்த பாடல் விளம்பரங்கள் மொக்கை ரகம். அந்த விதத்தில் ரஹ்மான் ரொம்ப நல்லவர். சொல்றது காதுலயே விழலை #எந்திரன்

✔ கலைஞர்தான் எவ்வளவு பெருந்தன்மையானவர்! கலைஞர் 86ம் ஆண்டு நூலகம் என வைக்காமல் அண்ணா நூற்றாண்டு நூலகம் என தன் பெயரைகூட விட்டுக்கொடுத்துள்ளார்.

✔  நம்ம லலித் மோடிக்கிட்ட CWG கேம்ஸை ஒப்படைச்சிருந்தா அட்டகாசம் பண்ணியிருப்பாரு. என்ன ஒரு தொள்ளாயிரம் லட்சம் கோடி எக்ஸ்ட்ரா ஆகியிருக்கும்

டிவிட்டரில் என்னை தொடர : ✔ 



■  இந்த வார கார்ட்டூன்




காமன்வெல்த்துல நம்ம ஊழல் பெருமக்கள் அடிச்ச தங்கத்தையும் சேர்த்து கவுண்ட் பண்ணா.. பதக்க பட்டியல்ல நாமதான் மொத இடம் பிடிப்போம்.  அவனவன் கஷ்டப்பட்டு உசுரக்கொடுத்து விளையாடி தங்கம் ஜெயிக்கிறான்.. இந்த மாதிரி ஊழல் ஆளுங்க நோகாமா நோண்பு கும்பிடறாங்க... 
ஆனா சும்மா சொல்லக்கூடாது விளையாட்டு வீரர்களை விட ரொம்ப நல்லா விளையாடுறீங்கடா...

Sunday, October 24, 2010

எவ்ரிடே இஸ் சண்டே - 1



குறைகள், கவலைகள், பிரச்சினைகள் வாழ்க்கையில் இருந்தாலும், ரசனை ரசிப்புக்கள் என்கிற உணர்வுகள் அவைகளை எளிதாக கடந்து செல்ல உதவும் வரங்கள். இனி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவின் வழி வாழ்வை ரசிக்கலாம் என்றிருக்கிறேன்.
____


மீப காலத்தில் ரொம்பவும் உற்சாகத்தை வரவழைக்கும் பாடல் விண்ணைத்தாண்டி வருவாயாவில் வரும் ஹோசானாதான். பாடல்களை காட்சிப்படுத்துவதில் கௌதம் மேனனின் ரசனையே தனி. அதிலும் இந்த பாடலில் பாடலின் தன்மைக்கேற்ப லொக்கேஷ்ன், உடை எல்லாம் இதமாக செட் ஆகியிருக்கும். சில பாடல்களில் சில வரிகள், சில இடங்கள் நம்மை வெகுவாக கவர்ந்துவிடும். இந்த பாடலில் "என் மீது அன்பு கொள்ள என்னோடு சேர்ந்தது செல்ல.." என வரும் இடங்களில் வரும் பாடல் குரலும், எழும் மெல்லிய இசையும் சில வினாடிகள் என்னை எங்கோ ஆழ்ந்த தியான நிலைக்கு கொண்டு செல்கிறது.




இதே படத்தில் வரும் கண்ணுக்குள் பாடலில் "உன் நண்பனில்லை.. " என்ற இடத்திலும், மன்னிப்பாயா பாடலில் வரும் திருக்குறள் இசையிலும் மனது அங்கேயே நின்று கொண்டு சுலபத்தில் மீண்டு வரமாட்டேன் என அடம் பிடிக்கிறது. 


யங்குகிறாள் ஒரு மாது பாடல். பின்னிரவுகளில் பயங்கர வேலைப் பளுவுடன் கணிணியில் உட்கார்ந்திருக்கும் வேளைகளில் இந்த பாடலை ஒரு முறை ஓடவிட்டு கண்ணை மூடி கேட்டால் மனதுக்கு அவ்வளவு இதமாய் இருக்கும். நல்ல ஓய்வெடுத்த உணர்வுடன் மீண்டும் வேலையை தொடர்வேன். அதிலும் பாடலின் நடுவே வரும் "அன்பே அன்பே... அன்பே அன்பே... அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா" என்ற வரிகளில் சுசீலா அம்மா உருகி ஓடியிருப்பார். எங்கோ பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் ஆளில்லாத ஒரு கிரகத்தின் மேல் வானத்தில் நம்மை மிதக்க வைக்கும் வல்லமை படைத்தவை இந்த வரிகளுக்கான குரலும் ராகமும். 


மொழி புரியாத சில பாடல்களும் இனம் புரியாத சந்தோஷத்தை கொடுக்கும்.  லஹே ரகோ முன்னாபாய் பாடல்கள் அவ்விதம். சென்னை திரு.வி.க பூங்காவில் நான் வாக்கிங் செல்லும்பொழுது காதில் ஹெட்போனில் இப்பட பாடல்கள் கசியும் பொழுது என் நடை வேகம் திடீரென அதிகரிப்பதை ரொம்ப நாள் கழித்துதான் உணர்ந்தேன்.


அதிலும் 'ஆனே சார் ஆனே' என வரும் பாடல் பயங்கரமான உற்சாக குறுகுறுப்பை உள்ளுக்குள் விதைத்துவிடும். வசூல்ராஜா படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தை ஒருமுறை பார்த்திருந்தீர்களென்றால் பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும். படமும் பிடிக்கும்.


ஞாயிறு கிழமைகளில் அம்மா சுடும் மட்டன் வடைக்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை. வறுத்துக்கொண்டிருக்கும்போதே சூடாக எடுத்து ஊதி ஊதி சாப்பிடும் சுகம் இருக்கிறதே. அட அட அட... கண்ணை மூடி சாப்பிடும் வேளையிலேயே பிறவிப்பயனை அடைந்துவிட்டார்போல் இருக்கும். 









ந்தானம். தமிழ் நகைச்சுவை திரை உலகில் தவிர்க்க முடியாத சொல் ஆகி வருகிறார். இவரது கண்டேன் காதலை பட நகைச்சுவை அட்டகாசம். இந்த படம் முழுவதிலும் இவரது எக்ஸ்பிரஷன்ஸ் ரொம்பவும் ரசிக்க வைக்கும். தமன்னா பரத்தை கட்டிப்பிடித்து சென்றவுடன் செடியை பிய்த்துக் கொண்டிருப்பாரே... வாவ்..  









ண்பர்கள். வாழ்க்கையின் வரம். சிலர் நமது வாழ்க்கை மாறுதல்களில் பெரும் பங்கு வகிப்பார்கள். சில நண்பர்கள் தற்செயலாக உதிர்க்கும் சொற்கள் அவர்களுக்கே தெரியாமல் நம்மில் வெகு ஆழத்தில் நிலைத்து பல வருடங்கள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.


2007ல் ஒரு முறை பழைய நிறுவனத்தில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் நானும் செந்தில் கே.பி என்கிற அந்த நண்பனும் கலந்துகொண்டோம். நிறுவனத்தைப் பற்றி பிரஷ் ஏதுமின்றி வெறும் விரல்களை வைத்தே வரைய வேண்டும். சக போட்டியாளர்களில் ஒருவர் தேசிய ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றவர் என கிசு கிசு பரவியது. அவரை கை காட்டி நான் செந்திலிடம் சொன்னேன்,


"செந்தில்.. அவர் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்டாம்.. நாமெல்லாம் தாக்குபிடிப்போமா...?"


   "ஹேய்.. ஏன்டா சுக்கு பயப்படுற.. நாம இன்டர்நேஷனல் ஆர்டிஸ்ட்டுடா.." 


என நண்பன் சர்வசாதாரணமாய் சொன்ன அந்த வார்த்தைகள் அடிக்கடி என் நினைவிற்கு வரும். 


அந்த போட்டியில் வரிசைப்படுத்தாமல் சிறந்த 5 ஓவியங்களை தேர்ந்தெடுத்தார்கள். அதில் முதலில் அறிவித்தது. எங்கள் பெயரைத்தான்.




அடுத்த ஞாயிறு சந்திப்போம். 

Friday, October 8, 2010

என் திறன் உணரவைத்த எந்திரன்









எந்திரனை நேற்று மூன்றாம் முறையாய் பார்த்தபோது, முதல் இரண்டு முறையை விட பாசிட்டிவ்வாக தோன்றியது. 


ஏ.ஆர்.ரஹ்மான்


போரா, சிட்டியிடமிருந்து நியூரல் ஸ்கீமாவை டவுன்லோட் செய்யும்பொழுது ஆரம்பிக்கும் டெரர் மியூசிக், சிட்டி 2.0 வின் அரக்க குணத்திற்கு எக்ஸலென்ட் மேட்ச். வில்லன் சிட்டியின் சேட்டைகள மிரட்டலாக உணர வைப்பதில் ரஹ்மான் இந்த ஒரே இசையை வைத்தே பல இடங்களில் மிரட்டியிருக்கிறார்.


ஐஸ்வர்யாவை மண்டபத்திலிருந்து கடத்தி வரும் வழியில் ரேபோ போலீசாருடன் சண்டையிடும்பொழுது 2.0 என ஒரு தீம் மியூசிக் வருகிறது. கொஞ்சம் காமிக்கல் உணர்வினை இந்த இசை தருவதால் பயமுறுத்த ஆரம்பிக்கும் வில்லத்தனத்தின் வீரியம் குறைகிறது. 


படத்திற்கான பாடல்களையே மாற்றி மாற்றி பின்னணி இசையாக வடிவமைப்பது ரஹ்மானின் ஸ்டைல். ஆனால் பெரும்பான்மையான இடங்களில் இது படத்தில் வரும் பாடலின் மெட்டு என நாம் உணரவே முடியாதபடி அமைப்பது அவரது ஸ்பெஷாலிட்டி. 
உதாரணத்திற்கு சிவாஜியில் ரஜினி சொத்தை இழந்து, ஷ்ரேயா இனி தேடி வராதீங்க என சொல்லிய பின் கையேந்தி பவனுக்கு செல்லும் வழியில் சோகமாக ஒரு 'ஆஆ....' இசை வரும். கூர்ந்து கவனித்தால் அது பல்லேலக்கா பாட்டில் வரும் காவிரி ஆறும் வரி மெட்டில் அமைந்திருக்கும்.


இதே போன்று இந்த படத்தில் முதல் பாதி சிட்டி ரோபோவிற்கான  பின்னணி இசை இரும்பிலே ஒரு இருதயம் பாடலின் மெட்டில் இருந்து மாற்றி மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. டிரெயினில் ஐஸை காப்பாற்ற தண்டவாளத்தில் ஸ்கேட் பண்ணும்பொழுதும், சார்ஜ் ஏற்றிக்கொண்டு மீண்டும் காப்பாற்ற வரும்பொழுதும், நெருப்பில் காப்பாற்றும் காட்சிகளிலும் வரும் இசை 'பீட்'கள் இரும்பிலே ஒரு இருதயம் பாடலின் மெட்டுக்கள். இந்த சூழ்நிலைகளுக்கு அது மிக கம்பீரமாக  பொருந்தியிருக்கிறது.


அதேபோல், சிட்டி ரேபோவுக்கு உணர்ச்சிகள் வரும் வேளையில் ரஹ்மான் ஒரு இசை கொடுத்திருக்கிறார் பாருங்கள். இந்த இசையால் மிகவும் வினோதமான ஒரு உணர்வு வருகிறது.


படத்தின் மெயின் வில்லன் சிட்டி 2.0விற்கு ஒரு இசை என்றால் சாஃப்ட் வில்லன் போராவிற்கு இன்னொரு வகையான இசை. கருத்தரங்கில் சிட்டி அறிமுகத்தின்போது போரா அறிமுக காட்சியிலும், ஏ.ஐ.ஆர்.டி அப்ரூவலில் ரஜினியை நிராகரிக்கும்பொழுதும் வரக்கூடிய இசைகள் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது.


புதிது புதிதாய் இசை அனுபவத்தை நமக்கு தந்துவிட்டு இந்த மனிதரால் கொஞ்சம் கூட கண்ணில் கர்வம் இல்லாமல் எப்படித்தான் அப்புராணியாய் புன்னகைக்க முடிகிறதோ தெரியவில்லை.


ரத்னவேலு


சில இடங்களில் டூப், மாஸ்க், ஸ்டண்ட் என வேறு ஆட்களை பயன்படுத்தியிருந்தாலும், பல இடங்களில் ஒரே சீன்களில் வரும் வேறு விதமான ரஜினிக்களுக்கேற்ப மண்டை குழம்பாமல் காட்சிப்படுத்தியதில் ஒளிப்பதிவாளர் பிரமிக்க வைக்கிறார். பின்னால் அமைக்கக்கூடிய சி.ஜி.க்களுக்கேற்ப முன்னாலேயே, காட்சியை பதிவு செய்யும்பொழுதே வெளிவரக்கூடிய முழு சீனையும் கற்பனை பண்ணி ஸ்ப்பா... எப்படியும் பெண்டு நிமிர்ந்திருக்கும். ஆனால் முழுப்படத்தையும் பார்க்கும் பொழுது இவை எதுவுமே நமக்கு தெரிவதில்லை. அதுதான் ஒளிப்பதிவாளரின் வெற்றி. ஆனாலும் ஈசியாய் நொல்லை சொல்லிவிட்டு போய்விடுகிறோம்.


பெருங்குடி குப்பை கிடங்கில் பார்ட் பார்ட்டாக கிடக்கும் ரேபோவை காரில் போரா ஏற்றிச்செல்லும் காட்சியில் கேமரா ஆங்கிள் சூப்பர். படமே தலை கீழாய் திரும்ப போகிறது என்பதற்கேற்ப காட்சியமைப்பு அது.


ராணுவத்தில் சிட்டி ரோபோவை அறிமுகம் செய்யும் ஆங்கிளும், கிளிமஞ்சாரோவில் கையில் கேமராவை எடுத்துக்கொண்டு படம் பிடித்துள்ள சில ஷாட்களும் சூப்பர்.
ஐஸ்வர்யாவை பார்க்க பிடிக்காதவர்களுக்கு (?!) பின்ணணியில் ஆங்காங்கே மச்சு பிச்சுவின் எழிலையும் காண்பிக்கிறார். 




ஐஸ்வர்யா


இரும்பிலே ஒரு இருதயம் பாடலில், தங்க வண்ணத்தில் பாடல் பாதியில் மாறும் இடத்தில்  "யூ வான் டு..." என ஆரம்பிக்கும் ஆங்கில வரிகளை பாடிக்கொண்டே ஒரு கருப்பு டிரஸ்ஸில் ஐஸ் ஆட ஆரம்பிப்பார் பாருங்கள்.. அட அட அட.. செய்யும் வேலையை ரசித்து செய்திருக்கிறார் ஐஸ். வெகு நளினமான நடனங்கள். குறிப்பாக இந்த பாடலிலும் கிளிமஞ்சாரோ பாடலிலும்.


நடிப்பு.. ஐஸ் அதிலும் கலக்குகிறார். சிட்டியிடம் காதலை நிராகரிக்கும்பொழுது கொடுக்கும் விளக்க உரை, கொசுவை பிடித்து வந்து முத்தம் கேட்கும்போது 'சிட்டி..' என அலுத்துக்கொள்வதும், பிளாக் ஷீப் காட்சியில் ரஜினி வெறுப்பேற்றும்போது தவிப்பை மறைத்து புன்னகைக்க முயற்சிப்பதும் என ஐஸ் ஐஸ்தான்.




ஷங்கர்


கனவு படத்தையும் எடுக்க வேண்டும், படம் பார்க்க வரும் ரஜினி ரசிகர்கள் ஸ்கிரீனை கிழிக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இரண்டையும் பாலன்ஸ் செய்து பெடல் அடித்து வண்டி ஒட்டியிருக்கிறார் ஷங்கர்.


ஷங்கரின் கனவிற்காக ரஜினியும், ரஜினியின் இமேஜிற்காக ஷங்கரும் பரஸ்பரம் தியாகங்கள் செய்திருக்கிறார்கள என்பதே நிஜம்.


படம் பார்த்த என் நண்பர் ஒருவர்,
"ஷங்கரின் பத்து வருஷ கனவிற்கு ஏற்றார்போல படம் இல்லை" என்றார்.


நான் அவரிடம் சொன்னது இதுதான்,
 "இது அவரோட கனவு நண்பா.. நீங்க எதிர்பார்ப்பது போல வேணும்னா நீங்கதான் கனவு கண்டு படம் எடுக்கனும்."


ஜேம்ஸ் கேமரூனின் கனவான அவதார் என்னை எந்த அளவிற்கு பிரமிக்க வைத்ததோ அதே அளவிற்கு ஷங்கரின் கனவான எந்திரனும் பிரமிக்க வைக்கிறான்.  


இரண்டு வருடங்களில் இவ்வளவு வேகமாய் உழைத்து படத்தை கொண்டு வருவது எனில் எவ்வளவு நட்டு கழண்டிருக்கும் என உணர முடிகிறது.


கதை சரியில்லை, கிராபிக்ஸ் சரியில்லை என ஏதேதோ சரியில்லைக்களை பட்டியிலிட்டு சொல்லலாம். ஆனால்... தமிழ், தெலுங்கு பிராதானம். டப் செய்யப்பட்டு ஹிந்தி, ஜப்பானிஸ் மொழிகள் போனஸ். சப் டைட்டிலில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் கொசுறு. இதுதான் படத்திற்கான மார்கெட். இதை வைத்துக்கொண்டு இப்பேற்பட்ட தொழில்நுட்ப தரமான படத்தை இன்றைய காலகட்டத்தில் கொடுத்தமைக்கு ஷங்கரை பாராட்டியே ஆகவேண்டும்.




ரஜினி


பொசஸிவ்னெஸ்ஸில் சிட்டியால் கடுப்புறும்  விஞ்ஞானி, வசீகரன் தன்னை உடைக்கும் பொழுது உயிர் வாழ கெஞ்சும் சிட்டி, மே மே... என மிரட்டும் ரேபோ 2.0 என ரஜினியின் ஆதிக்கம் படம் முழுவதிலும் இருக்கிறது. ஆனால் அவரது நடிப்பிற்காக பாராட்டுவதை விட அவரது உழைப்பிற்காக பாராட்டுவதே பொருத்தமாக இருக்கும். 


60 வயசு. ரிட்டையர் ஆகி ஓய்வெடுக்க உடல் கெஞ்சும் தருவாயில், கதை கேட்கும்பொழுதே கதி கலங்க செய்யும் புராஜக்டை கையில் எடுத்து அதை அனுபவித்து நடித்துக்கொடுத்திருக்கும் ரஜினி சிறந்த மாபெரும் உழைப்பாளி. 


ஆனால் அவர் கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறாரே? 
 சும்மா உட்கார்ந்து ஓப்பி அடித்து கோடி கோடி கணக்கில் பணம் சுருட்டும் அரசியல், ஊழல்வாதிகள் இருக்கும் நாட்டில் உழைத்து பணம் சம்பாதிக்கும் ரஜினி எவ்வளவ்வோ மேல்.


அதுக்காக அவர் சும்மா பாட்டு பாடி டான்ஸ் ஆடி வசனம் பேசறதுக்கு கோடி கணக்கில் பணமா..?
 இது சும்மா வேலைதான் என்றால் இதே வேலையை நீங்களே நானோ செய்ய முடியாது. என்னால் செய்ய முடியும் வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என சொல்கிறீர்களா.. வாய்ப்பை யாரும் தேடி வந்து கொடுக்க மாட்டார்கள். தேடி தேடி அடிபட்டு மிதிபட்டுதான் ரஜினி இந்த நிலைக்கு வந்திருக்கிறார். அவர் சும்மா ஆகிவிடவில்லை சூப்பர் ஸ்டார். 


டிரெயின் சண்டை காட்சி, ரோபோ பாடல் காட்சிகளில் மாஸ்க் போட்டு வேறு யாரோ பொர்பார்ம் செய்ய, புகழ் மட்டும் இவருக்கா?
 அந்த மாஸ்க்கை எடுத்துவிட்டோ அல்லது வேறு முகம் போல வடிவமைத்து போட்டுக்கொண்டு பெர்பார்ம் செய்தாலோ அவர்களுக்கு இந்த படத்தில் வேலையே இல்லை. இந்த முகத்தை இத்தனை வருட உழைப்பில் மக்கள் மனதில் நிறுத்தியது தான் ரஜினியின் பெர்பார்மன்ஸ். மாஸ்க் போட்டு உழைத்திருக்கும் கலைஞர்களை மட்டம் தட்டவில்லை. அவர்களுக்கான பாராட்டு  கண்டிப்பாய் உண்டு. ஆனால் அவர்களது முகத்தை, அவர்களது திறமை மற்றும் உழைப்பின் மூலம் அவர்கள்தான் மக்கள் மனதில் நிறுத்த வேண்டும்.


எந்திரன் 


ஏ.ஆர், ஐஸ், ரத்னம், ஷங்கர், ரஜினி என அவரவர் தனித்தன்மையான கூட்டு உழைப்புகளால் உருவாகி இருக்கும் எந்திரனை பார்க்கும்போது எனக்கு பிரமிப்பு மட்டுமே ஏற்படுகிறது. 


சினிமா என்பதும் ஒரு தொழில்தான். இதே போன்றதொரு புதிய சிந்தனையை, புதிய தொழில்நுட்பம் நாடும் தேடலை சிறப்பான உழைப்பை நமது வேலையில், நமது தொழிலில் நாம் முயற்சித்து பார்க்கிறோமா என்பதை மட்டுமே நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். 


நமது சமகால தமிழர்கள் வட இந்தியாவை, உலகை, பிரமிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் இதேப்போன்ற பிரமிப்பை நமது தொழிற்சர்ந்த சாதனைகளால் நாமும் நிகழ்த்த முடியும் என்கிற பாசிட்டிவ் உணர்வினை எனக்கு தந்த எந்திரனுக்கு நன்றி!